23042024Tue
Last update:Thu, 18 Apr 2024

யாழ். மக்கள் மத்தியில் நிம்மதிப் பெருமூச்சு

யாழ். குடாநாட்டில் சமீப காலமாக குற்றச்செயல்கள் கட்டுமீறிச் சென்றதன் காரணமாக அச்சத்துக்கும் கவலைக்கும் உள்ளாகியிருந்த மக்கள் தற்போது ஓரளவு நிம்மதியடையத் தொடங்கியுள்ளனர். அங்கு இடம்பெற்று வந்த குற்றச் செயல்கள் குறுகிய காலத்துக்குள் பெருமளவு தணிந்தி ருப்பதைக் காண முடிகிறது. அமைதியை விரும்புகின்ற மக்க ளைப் பொறுத்தவரை அவர்கள் இப்போது நிம்மதியடைந்திரு க்கின்றனர்.

நீண்ட காலமாக நிலவிய யுத்தம் கடந்த 2009ம் ஆண்டு முடிவு க்குக் கொண்டு வரப்பட்டதையடுத்து வடமாகாணத்தில் மிக மோசமான கலாசார சீரழிவுகள் தலைதூக்கியதை எவரும் மறுக்க முடியாது. அளவு கடந்த சுதந்திரத்தின் விளைவாக இளைஞர் சமுதாயம் தறிகெட்டு நடக்கத் தலைப்பட்டதனாலேயே சமூக சீர் கேடுகள் கட்டுப்பாட்டை மீறிச் சென்றதாக சமூக ஆர்வலர்கள் குறிப்பிட்டதை இங்கு சுட்டிக் காட்டுவது பொருத்தம்.

அதேசமயம் வட பகுதியில் கலாசார சீரழிவுகளும் குற்றச் செயல்களும் அதிகரித்துச் சென்றதையிட்டு கடந்த அரசாங்கம் பொருட்படுத்தாமல் அலட்சியமாக இருந்ததாக மற்றொரு புறத்தில் வடபகுதி புத்திஜீவிகள் வருத்தம் தெரிவித்ததையும் இங்கே குறிப்பிடாமலிருக்க முடியாது.

வடபகுதி சமூகத்தைக் குற்றச் செயல்கள் நிறைந்ததொரு சமூகமாக மாற்றுவதற்கு ஊக்கமளிக்கும் வகையில் மறைமுகமான முறையில் காரியங்கள் நடந்து வந்ததாகக் கடந்த ஆட்சிக் காலத்தின் போது பரவலாக புகார்கள்தெரிவிக்கப்பட்டு வந்தன. இந்தியாவில் இருந்து ‘கேரள கஞ்சா’ கடத்தி வரப்படுவதற்கான கேந்திர நிலையமாக யாழ்ப்பாணம் மண் இருந்து வந்துள்ளது. அயல் நாடுகளில் இருந்து போதைப் பொருள் கடத்தப்படு வதற்கான தளமாகவும் யாழ் குடாநாடு பயன்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியமை நினைவிருக்கலாம்.

யாழ். குடாநாட்டில் போதைப்பொருள், கஞ்சா போன்றவை கடத் தப்படுவது முறியடிக்கப்பட்ட சம்பவங்களும் அடிக்கடி இடம் பெற்றுள்ளன. போதைப்பொருள் கடத்தலும் பாவனையும் யாழ். குடாநாட்டுக்குப் புதியவையாகும். முப்பது வருட கால யுத்தத்தின் போது வன்செயல்கள் அதிகரித்த பிரதேசமாக யாழ். குடாநாடு விளங்கியதே தவிர போதைப்பொருள் பாவனை யென்பது அங்கு முன்னரெல்லாம் இடம்பெற்றதில்லை.

யுத்தத்தின் பின்னரான காலப் பகுதியில் போதைப் பொருள் கடத் தலும் பாவனையும் யாழ். குடாநாட்டில் திடீரென அதிகரித்த தனாலேயே சமூக ஆர்வலர்கள் மத்தியில் சந்தேகங்களும் உரு வெடுக்கத் தொடங்கின. கல்வியிலும் கடின உழைப்பிலும் மேலோங்கியிருந்த யாழ். சமூகத்தை மற்றொரு திசைக்குத் திருப்பும் நோக்கிலேயே திட்டமிட்டமுறையில் போதைப் பொருள் பாவனை அங்கு புகுத்தப்பட்டதாக பரவலாகப் புகார் கள் வெளிவந்தமை ஞாபகமிருக்கலாம்.

போதைப்பொருள் பாவனையின் விளைவினால்தான் யாழ்.குடாநாட் டில் சமீப காலமாக கொலை, கொள்ளை, பாலியல் துஷ் பிரயோகம், வழிப்பறி போன்ற பல்வேறு குற்றச் செயல்கள் கட்டுப்படுத்த முடியாத நிலைமைக்குச் சென்றன. அமைதியை விரும்புகின்ற அப்பாவிமக்கள் அச்சமின்றி நிம்மதியாக வாழ முடியாததொரு சூழல் அண்மைக் காலமாக நிலவி வந்தமை ஞாபகமிருக்கலாம்.

வடக்கில் மோசமடைந்த சமூகச் சீர்கேட்டுக்கு உதாரணமாகவே புங்குடுதீவு மாணவி வித்யாவுக்கு நடந்த கொடுமையையும் இங்கே நோக்க வேண்டியுள்ளது. வடக்கில் குற்றச்செயல்கள் இத்தனை மோசமாக கட்டுமீறிச் சென்றமைக்கு பொலிஸாரின் அலட்சியமும் காரணமென்பதை மறுக்க முடியாது.

வடக்கின் வன்முறைக் கலாசாரம் தொடர்பாக அங்குள்ள மக்கள் அச்சத்துக்கு உள்ளாகியிருந்த வேளையிலேயே மேல் நீதிமன்ற நீதிபதியாக எம். இளஞ்செழியன் தற்போது பதவியேற்றுள்ளார். வடக்கின் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவதில் மேல் நீதிமன்ற நீதிபதி தற்போது மேற்கொண்டுள்ள கடுமையான நடவடிக்கைகள் மக்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளன. குற்றச் செயல்கள் இனிமேல் பெருமளவில் குறைந்து விடு மெனவும், நிம்மதியாக வாழக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டு விடுமெனவும் மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

யாழ். மாவட்டத்தில் அப்பாவி மக்களின் நிம்மதியான வாழ்வைக் குலைக்கும் வகையிலான எத்தகைய சம்பவத்துக்கும் இடமளி க்கப்பட மாட்டாதெனத் தெரிவித்துள்ள மேல்நீதிமன்ற நீதிபதி எம். இளஞ்செழியன், பொலிஸாருக்கும் கடுமையான உத்தரவுக ளைப் பிறப்பித்துள்ளார்.

அதேசமயம் மோசமான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு பிணை வழங்கப்பட மாட்டாதெனவும் அவர் தெரிவித்துள்ளார். குற்றச் செயல்கள் அதிகம் இடம்பெறுவதாக அடையாளம் காணப் பட்டுள்ள இடங்களில் அவசியம் ஏற்படுமிடத்து விசேட அதிர டிப்படையினரைக் கொண்டு சுமுக நிலைமை ஏற்படுத்தப் படுமென அவர் அறிவித்துள்ளார்.

இவ்வாறான கடுமையான நடவடிக்கைகளையே யாழ். மக்கள் இதுவரை காலமும் எதிர்பார்த்திருந்தனர். இதுபோன்ற நடவடிக் கைகள் எடுக்கப்படாது போனால் அப்பிரதேசத்தில் எதிர் காலத்தில் மக்கள் வாழ முடியாததொரு சூழ்நிலையே ஏற்படும் ஆபத்து இருந்தது. குற்றவாளிகள் இப்போது அச்சமடைந் திருப்பதாக தகவல்கள் வெளிவருகின்றன. எனவே குற்றங்கள் பெருமளவு குறையுமென நாம் எதிர்பார்க்கமுடியும்.

யாழ். மண்ணுக்கென தனித்துவமொன்று இருந்து வந்ததை நாம் மறந்து விடமுடியாது. கல்வி, கடின உழைப்பு, விவசாயம், கைத் தொழில், வியாபாரம் போன்ற பல்வேறு துறைகளில் வேறு பிர தேசமே போட்டி போட முடியாதபடி தன்னிகரற்ற நிலையில் யாழ். பிரதேசம் இருந்து வந்தது. அங்கு சிறப்பான கலாசாரமும் நாகரிகமும் நிலவி வந்ததையும் நாம் மறந்து விட முடியாது. அவ்வாறான கலாசாரம் புதையுண்டு போவதற்கு இடமளித்து விடக் கூடாது. யாழ். மண்ணின் கீர்த்தியை மீண்டும் மேலோங் கச் செய்கின்ற பொறுப்பு அம்மண்ணைச் சேர்ந்த ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு.