25042024Thu
Last update:Thu, 18 Apr 2024

நல்லிணக்கம், அபிவிருத்தி: புலம்பெயர் அமைப்புகளுடன் இணைந்த வேலைத்திட்டம்

புலம்பெயர் இலங்கையர் உதவியைப் பெறும் வகையில் விசேட ஏற்பாடு

ஜேர்மனியில் மங்கள தெரிவிப்பு

SriLankanForeignMinisterInGermanyநல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தி என்ற அரசாங்கத்தின் இலக்கை அடைவதற்கு புலம் பெயர்ந்துவாழ் அமைப்புக்களையும் இணைத்துக்கொண்டு முன்செல்லவிருப்பதாக வெளி விவகார அமைச்சர் மங்கள சமரவீர ஜேர்மனியில் தெரிவித்துள்ளார்.

ஜேர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த அமைச்சர் மங்கள சமரவீர அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் ப்ராங்க் வோல்டர் ஸ்டெயின்மெர் உள்ளிட்ட முக்கியஸ்தர் களைச் சந்தித்துக் கலந்துரையாடியபோதே இவ்வாறு கூறியுள்ளார்.

உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள புலம் பெயர்ந்துவாழ் இலங்கையர்களை ஒன்றிணைப்பதற்கான நிகழ்வொன்றை ஏற்பாடு செய்வதற்கு முன்னுரிமை வழங்க வெளிவிவகார அமைச்சு தீர்மானித்திருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வர்த்தகம், கலை, இலக்கியம் கல்வி மற்றும் விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் திறமையுள்ள புலம்பெயர்ந்து வாழ் இலங்கையர்களை இணைத்து நாட்டின் நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகளை முன்நகர்த்திச் செல்ல எதிர்பார்த்திருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

கடந்த 21ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை ஜேர்மனுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, அந்நாட்டி வெளிவிவகார அமைச்சர், பிரதி ஜனாதிபதி, பொருளாதார ஒத்துழைப்புத் தொடர்பான பாராளுமன்ற செயலாளர் உள்ளிட்ட பல தரப்பினரை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

புதிய அரசாங்கம் 100 நாட்களில் எட்டியிருக்கும் இலக்குகள் குறித்தும் நல்லாட்சி, சட்டம் ஒழுங்கு, பொருளாதார அபிவிருத்தி என்பவற்றை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் எடுத்திருக்கும் நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் மங்கள சமரவீர விளக்கமளித்திருந்தார். பொதுத் தேர்தலின் பின்னரும் எதிர்க்கட்சிகளை இணைத்துக்கொண்டு தேசிய முக்கியத்துவம்வாய்ந்த பிரச்சினைகளைத் தீர்க்கவேண்டும் என்பதே புதிய அரசாங்கத்தின் நோக்கம் என்பதையும் அமைச்சர் இங்கு சுட்டிக்காட்டியிருந்தார்.

பல்லின சமூகம் வாழும் நாட்டில் நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தி என்பவற்றுக்கே தமது அரசாங்கம் முன்னுரிமை அளித்திருப்பதாகவும் அவர் கூறினார். புலம்பெயர்ந்து வாழ்பவர்களுடன் இணைந்து செயற்படவேண்டியதன் முக்கியத்துவத்தை தமது அரசாங்கம் உணர்ந்திருப்பதாகவும், புலம்பெயர்ந்து வாழ் இலங்கையர்களின் உதவியைப் பெற்றுக்கொள்ளக் கூடிய வகையில் நிகழ்வொன்றை ஏற்படுத்த தமது அமைச்சு செயற்படவிருப்பதாகவும் கூறினார்.வெளிநாட்டு முதலீடுகள், சுற்றுலாப்பயணத்துறை போன்ற துறை களின் ஊடாக உறுதியான அபிவி ருத்தியொன்றை ஏற்படுத்துவதே புதிய அரசாங்கத்தின் கொள்கையாகும். இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடனான திறந்த வர்த்தக உடன் படிக்கை போன்றவை இதற்கு மேலும் வலுச்சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார். இலங்கைக்கும் ஜேர்மனுக்கும் இடையிலான உறவுகளை மேலும் பலப்படுத்துவது தொடர்பில் இருதரப்புச் சந்திப்புக்களில் கவனம் செலுத்த ப்பட்டிருந்தது.