இலங்கையின் 22 ஆவது பிரதமர் பதவியேற்றார்

ranil sworn maithree4 முறை பிரதமராக பதவியேற்ற இலங்கையின் முதல் பிரதமரானார் ரணில் விக்ரமசிங்க

 இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 22 ஆவது பிரதமராக ரணில் சிரியான் விக்ரமசிங்க சற்று முன்னர் பதவியேற்றார்.

 இன்று (21) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற இவ்வைபவத்தில், அமையவுள்ள 8 ஆவது பாராளுமன்றத்தின் புதிய பிரதமராக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் ரணில் விக்ரமசிங்க பதவியேற்றார்.

இதன் மூலம் இலங்கையின் அரசியல் வரலாற்றில் 4 முறை பிரதமராக பதவியேற்ற ஒரே ஒரு பிரதமராக ரணில் விக்ரமசிங்க சாதனைபடைத்துள்ளார்.

இதன் மூலம், இதுவரை உலகின் 4 முறை பதவி வகித்த பிரித்தானியாவின் பிரதமர் வில்லியம் எவார்ட் க்ளட்ஸ்டொனின் 121 வருட சாதனை சமன் செய்யப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

இவ்வைபவத்தில் தேசிய அரசாங்கமொன்றை அமைக்கும் நோக்கில் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் உடன்படிக்கையொன்றும் கைச்சாத்திடப்பட்டது. இதில் ஐ.தே.க சார்பில் அதன் செயலாளர் கபீர் ஹாசிம் மற்றும் ஶ்ரீ.ல.சு.க சார்பில் அதன் செயலாளர் துமிந்த திஸாநாயக்க ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டமை குறிப்பிடத்தக்கது.

கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி 106 ஆசனங்களைப் பெற்று வெற்றியீட்டியதைத் தொடர்ந்து ஜனாதிபதி மைத்திரிபாலவுடனான இணக்கப்பட்டின் கீழ் தேசிய அரசாங்கமொன்றை அமைப்பதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உடன்பாட்டை எட்டியது. அவ்வுடன்பாட்டுக்கு அமையவே இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.