பிரதமரின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் சில அமைச்சுக்கள், பொது நிறுவனங்கள்

tkn cus pm hucதனது ஆட்சிக்காலத்தில் முதல் காலாண்டிற்குள் திட்டமிட்ட வகையில் இலக்குகளை அடையாத அமைச்சுக்கள் மற்றும் முக்கிய பொது நிறுவனங்களை தனது நேரடி கண்காணிப்பிற்குள் கொண்டு வருவதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.

சில அமைச்சுக்களும் பல பொது நிறுவனங்களும் கடந்த அரசாங்கத்தில் பின்பற்றிய அதே அசமந்தப் போக்கை தொடர்வதன் காரணமாக நல்லாட்சி அரசாங்கத்தின் கொள்கைகளை தவறவிட்டிருப்பதாக கிடைத்துள்ள முறைப்பாடுகளுக்கமையவே பிரதமர் இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளார்.

இதேவேளை, பிரதமர் தனது சீனப் பயணத்தை தொடர்ந்து கல்வி அமைச்சின் தேசிய மட்ட செயற்பாடுகளை முழுமையாக மீளாய்வு செய்யவுள்ளார்.

கடந்த வருடம் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட இலக்குகளை எட்ட தவறிய முக்கிய அமைச்சின் செயற்பாடுகளை தமிழ், சிங்கள புதுவருடத்திற்குப் பின்னர் பிரதமர் தனது கண்காணிப்பின் கீழ் கொண்டு வரவுள்ளார். குறித்த அமைச்சின் உயர் மட்ட பெண் அதிகாரியொருவர் அனைத்து செயற்பாடுகளினதும் பின்னடைவுக்கு காரணமென பிரதமருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இத்துடன் இணைந்ததாக மேலும் மூன்று அமைச்சுக்கள் மற்றும் நான்கு பொதுமக்கள் நிறுவனங்களும் அடுத்த வரவு – செலவு திட்ட முன்வைப்புக்கு முன்னாள் பிரதமரின் கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்படவுள்ளது.

கடந்த காலங்களில் முற்றிலும் அரசியல் மயப்படுத்தப்பட்டிருந்த வெளிவிவகார அமைச்சினை மறுசீரமைப்பதில் பிரதமர் நேரடியாக தலையிட்டிருந்தார். அத்துடன் பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்கும் உள்ளாகியிருந்த தேசிய பாடசாலைகளின் அதிபர்களால் மற்றும் உப அதிபர்களையும் பிரதமர் இடமாற்றம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.