நாட்டினை முன்னேற்றப் பாதையில் நகர்த்திச் செல்வதற்கு அறிஞர்கள், புத்திஜீவிகளின் கருத்துக்களை கவனத்தில் கொள்ளவேண்டும் – ஜனாதிபதி.

056 1140x872கடந்த காலங்களில் அறிஞர்கள் மற்றும் புத்திஜீவிகளினுடைய கருத்துக்களை கவனத்தில் கொள்ளாமல் பல அரசியல் தீர்மானங்கள் மற்றும் முடிவுகள் இந்நாட்டில் எடுக்கப்பட்டதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

 நாட்டினை முன்னேற்றப் பாதையில் நகர்த்திச் செல்வதற்கு அறிஞர்கள் மற்றும் புத்திஜீவிகளின் கருத்துக்களையும் கவனத்தில் கொள்ளவேண்டும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

 பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று (07) இடம்பெற்ற அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க எழுதிய “One A Gathering of Unities”  நூலினை வெளியிட்டு வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அமைச்சர் சம்பிக்க ரணவக்க கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் பல்வேறு பிரதேசங்களுக்கும் விஜயம் செய்த வேளைகளில் வித்தியாசமான கோணங்களில் பிடிக்கப்பட்ட படங்களை உள்ளடக்கியதாக இந்நூல் அமைந்திருக்கின்றது.

சமூகத்தினையும் உலகத்தினையும் நன்றாக அறிந்து வைத்திருக்கின்ற அமைச்சர் சம்பிக்க ரணவக்க போன்ற பல்வேறு துறைகளிலும் சிறந்த அறிவு மற்றும் அனுபவத்தினை கொண்டுள்ள புத்திஜீவிகளின் கருத்துக்கள் நாட்டினை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வதற்கு மிகவும் முக்கியமானது எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

நாட்டுக்கு தேவைபட்ட மாற்றமொன்றின் ஊடாக புதிய யுகத்திற்குள் இந்நாட்டினை அழைத்துச் செல்வதற்கு கடந்த ஜனாதிபதி தேர்தலில் அமைச்சர் சம்பிக்க ரணவக்க வழங்கிய பாரிய ஒத்துழைப்பினையும் ஜனாதிபதி நினைவுகூர்ந்தார்.

அறிஞர்கள் மற்றும் புத்திஜீவிகளின் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் கவனத்தில் எடுத்து, அதனூடாக ஜனநாயம் மிகுந்த நாட்டினையும் சிறப்பான அரச சேவையினை மக்களுக்கு வழங்குவதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கமாகும் எனவும் மேலும் தெரிவித்தார்.

அமைச்சர் கரு ஜயசூரிய உள்ளிட்ட சில அமைச்சர்களும் பேராசிரியர் கார்லோ பொன்சேகா மற்றும் பல சிறப்பு அழைப்பாளர்களும் இந்நிகழ்வில் பிரசன்னமாகியிருந்தனர்.